குடும்ப மகிழ்ச்சியை பாதிக்கும் ஆண்களின் கோபம்: ‘Short Temper’ என்று கடந்து செல்லலாமா?
“எனக்கு என் குடும்பம் மிகவும் முக்கியம். ஆனால் கோபம் வந்தால் என்ன பேசுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. பிறகு நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.”
சமீபத்தில் ஒரு consultation-ல் ஒரு கணவர் என்னிடம் பகிர்ந்த வார்த்தைகள் இவை.
அவருக்கு மனைவி, குழந்தைகள் மீது அன்பு இல்லையா? அப்படி இல்லை. குடும்பத்திற்காக உழைத்தார். அவர்களின் தேவைகளை கவனித்தார். எதிர்காலத்தைப் பற்றியும் அக்கறை கொண்டிருந்தார்.
ஆனால் ஒரு பிரச்சனை இருந்தது.
கோபம் வந்த சில நிமிடங்களில், அவருடைய அன்பை விட அவரது வார்த்தைகளே குடும்பத்தினருக்கு அதிகமாகத் தெரிந்தன.
சிறிய விஷயத்திற்கும் எரிச்சல். எதிர்பார்த்தபடி ஒன்று நடக்கவில்லை என்றால் கடுமையான பேச்சு. குழந்தைகள் தவறு செய்தால் கத்துவது. மனைவி ஏதாவது விளக்க முயன்றால் மேலும் கோபப்படுவது.
கோபம் குறைந்த பிறகு வருத்தம் வரும்.
“நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது” என்று தோன்றும்.
ஆனால் சில நாட்களில் மீண்டும் அதே pattern.
அவர் அதை மிகவும் சாதாரணமாக,
“நான் கொஞ்சம் short-tempered.”
என்று சொன்னார்.
ஆனால் அவருடன் வாழும் குடும்பத்தினருக்கு அது வெறும் “Short Temper” ஆக இருக்கவில்லை.
கோபம் வருவது பிரச்சனையா?
கோபம் இயல்பான மனித உணர்ச்சி.
வேலை அழுத்தம், பணப் பிரச்சனை, குடும்பப் பொறுப்புகள், தூக்கமின்மை, நிறைவேறாத எதிர்பார்ப்புகள், ஏமாற்றம், பயம், frustration என பல காரணங்கள் ஒருவருக்குள் emotional pressure-ஐ உருவாக்கலாம்.
அதனால் கேட்க வேண்டிய கேள்வி,
“எனக்கு ஏன் கோபம் வருகிறது?” என்பது மட்டும் அல்ல.
“எனக்கு கோபம் வரும்போது, என்னுடன் வாழும் மனிதர்கள் எப்படி உணர்கிறார்கள்?”
என்பதும்தான்.
ஒரு சிறிய சம்பவம் சொல்லிய பெரிய உண்மை
ஒரு பெண் தனது கணவர் மற்றும் சகோதரருடன் காரில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
காரின் கதவு சரியாக lock செய்யப்படவில்லை.
அதை கவனித்த கணவர்,
“இதுகூட தெரியாதா? கதவை lock பண்ணத் தெரியாதா?”
என்று கோபமாகப் பேசினார்.
அந்தப் பெண் எதுவும் பேசவில்லை.
சிறிது நேரத்தில் ஒரு கடையின் அருகே காரை நிறுத்தினர். Roadside என்பதால் காரிலிருந்து இறங்குவதற்கு அவருக்கு சிறிது சிரமம் ஏற்பட்டது.
மீண்டும் கோபம்.
மீண்டும் கடுமையான வார்த்தைகள்.
பின்னர் அவரது சகோதரர் தனியாக,
“ஏன் அவர் இப்படி பேசுகிறார்?” என்று கேட்டபோது அந்தப் பெண் சொன்னார்:
“இது இன்று மட்டும் இல்லை. அடிக்கடி இப்படித்தான் நடக்கிறது.”
அந்த ஒரு வாக்கியம் பல விஷயங்களைச் சொன்னது.
மனைவியின் அமைதி, புரிதலின் அடையாளமாக இருக்க வேண்டியதில்லை
ஒருவர் தொடர்ந்து கோபமாகப் பேசும்போது, மற்றவர் ஆரம்பத்தில் தன்னை விளக்க முயற்சி செய்வார்.
“நான் அப்படி நினைக்கவில்லை.”
“நான் வேண்டுமென்று செய்யவில்லை.”
“கொஞ்சம் அமைதியாக பேசுங்கள்.”
என்று சொல்லலாம்.
ஆனால் ஒவ்வொரு உரையாடலும் சண்டையாக முடிந்தால், ஒரு கட்டத்தில் பேசுவதையே குறைத்துக்கொள்ளலாம்.
அந்த அமைதியை,
“அவர் என்னைப் புரிந்துகொண்டார்”
என்று நினைத்துவிடக்கூடாது.
அது,
“பேசி என்ன பயன்?”
என்ற சோர்வாக இருக்கலாம்.
“என் உணர்வுகளைச் சொன்னாலும் புரிந்துகொள்ளப்படுவதில்லை” என்ற மனவருத்தமாக இருக்கலாம்.
அல்லது மீண்டும் conflict வேண்டாம் என்பதற்காக உருவாகும் emotional withdrawal ஆக இருக்கலாம்.
பல உறவுகளில் emotional distance ஒரு பெரிய சண்டையில் ஆரம்பிப்பதில்லை.
சிறிது சிறிதாக பேசுவதை நிறுத்துவதிலிருந்து ஆரம்பிக்கலாம்.
கோபத்தின் பின்னால் என்ன இருக்கிறது?
Psychotherapy-ல் கோபத்தை மட்டும் பார்த்துவிட்டு நிறுத்துவதில்லை.
அந்தக் கோபத்தின் பின்னால் என்ன இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.
சிலருக்கு stress.
சிலருக்கு frustration.
சிலருக்கு fear அல்லது insecurity.
சிலருக்கு தாங்கள் மதிக்கப்படவில்லை என்ற உணர்வு.
சிலருக்கு எல்லாமே தாங்கள் நினைத்தபடி நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.
சிலர் தங்கள் மனஅழுத்தத்தை வெளிப்படுத்த வேறு ஆரோக்கியமான வழிகளை கற்றிருக்காமல் இருக்கலாம்.
அதனால் Anger Management என்பது கோபத்தை அடக்குவது அல்ல. கோபத்தைப் புரிந்துகொண்டு, அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதை மாற்றக் கற்றுக்கொள்வது.
கோபம் வரும் நேரத்தில் ஒருவர் தன்னிடம் கேட்கலாம்:
“இப்போது என்னை உண்மையில் பாதித்தது என்ன?”
“நான் சொல்லப்போகும் வார்த்தை இந்தப் பிரச்சனையைத் தீர்க்குமா?”
“இதே வார்த்தையை வேறு ஒருவர் என்னிடம் சொன்னால் நான் எப்படி உணர்வேன்?”
இந்த awareness வளரும்போது, உடனடி reaction-க்கும் ஆரோக்கியமான response-க்கும் இடையில் ஒரு இடைவெளி உருவாகத் தொடங்கும்.
குடும்பத்திற்கு Emotional Safety தேவை
ஒரு கணவர் குடும்பத்திற்காக சம்பாதிக்கிறார்.
வீடு, கல்வி, மருத்துவம், சேமிப்பு, எதிர்காலம் என குடும்பத்தின் பாதுகாப்பிற்காக பல பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்.
அவை அனைத்தும் முக்கியமானவை.
ஆனால் குடும்பத்திற்கு financial security மட்டும் போதாது.
Emotional Safety-யும் தேவை.
மனைவி தனது கருத்தைச் சொல்லும்போது,
“இதைச் சொன்னால் அவர் கோபப்படுவாரோ?”
என்று பயப்பட வேண்டிய நிலை இருக்கக்கூடாது.
குழந்தை ஒரு தவறு செய்துவிட்டால்,
“அப்பாவுக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ?”
என்று மறைக்க வேண்டிய சூழல் இருக்கக்கூடாது.
குடும்பத்தில் ஒருவர் தனது கருத்து, பயம், தவறு, வருத்தம் அல்லது தேவையை அவமானப்படுத்தப்படுவோம் என்ற அச்சமின்றி பகிர முடிவது emotional safety-யின் ஒரு முக்கியமான பகுதி.
குழந்தைகள் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்
குழந்தைகள் பெற்றோர் தங்களிடம் எப்படி பேசுகிறார்கள் என்பதை மட்டும் கற்றுக்கொள்வதில்லை.
அப்பா அம்மாவிடம் எப்படி பேசுகிறார் என்பதையும், அம்மா அப்பாவிடம் எப்படி பேசுகிறார் என்பதையும் பார்க்கிறார்கள்.
கருத்து வேறுபாடு வந்தால் கத்த வேண்டுமா?
கோபம் வந்தால் மற்றவரை அவமானப்படுத்தலாமா?
ஒருவர் தவறு செய்தால் எப்படி பேச வேண்டும்?
மன்னிப்பு கேட்பது பலவீனமா?
அன்பான உறவிலும் மரியாதை அவசியமா?
உறவுகளைப் பற்றிய குழந்தைகளின் ஆரம்பகால புரிதலில் அவர்கள் வீட்டில் பார்க்கும் அனுபவங்களும் ஒரு பங்கு வகிக்கின்றன.
அதனால் ஒரு பெற்றோர் தனது Emotional Regulation-ஐ மேம்படுத்துவது அவருக்காக மட்டும் அல்ல.
குடும்பத்தின் emotional environment-க்காகவும்.
உண்மையான Emotional Strength என்றால் என்ன?
கத்துவது strength அல்ல.
எல்லோரையும் அமைதியாக்குவது strength அல்ல.
ஒவ்வொரு வாதத்திலும் ஜெயிப்பதும் strength அல்ல.
கோபம் வந்தபோதும் வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுப்பது;
தவறு நடந்தால் மனிதரை அவமானப்படுத்தாமல் பிரச்சனையைப் பற்றி பேசுவது;
வேலை அழுத்தத்தை குடும்பத்தின் மீது கொட்டாமல் கையாள்வது;
மனைவி பேசும்போது பதில் சொல்லுவதற்காக மட்டும் அல்லாமல், அவர் என்ன உணர்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளக் கேட்பது;
தவறு செய்துவிட்டால்,
“நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. மன்னித்துவிடு.”
என்று பொறுப்பேற்பது—
இவையும் emotional strength தான்.
இதையே Emotional Responsibility — உணர்ச்சிப் பொறுப்பு என்று சொல்லலாம்.
திருமணத்திற்கு முன்பே நாம் கற்றுக்கொள்ள வேண்டியது
திருமணத்திற்கு முன்பு பலர்,
“நல்ல வேலை இருக்கிறதா?”
“வருமானம் போதுமா?”
“வீடு இருக்கிறதா?”
“குடும்பத்தை நடத்த முடியுமா?”
என்று யோசிக்கிறார்கள்.
அதோடு இன்னொரு கேள்வியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்:
“என் கோபம், மனஅழுத்தம், ஏமாற்றம் மற்றும் கடினமான உணர்ச்சிகளை ஆரோக்கியமாக கையாள எனக்குத் தெரியுமா?”
திருமணத்திற்குப் பிறகு இன்னொரு கேள்வி முக்கியம்:
“என்னுடைய emotional reactions என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் எப்படிப்பட்ட அனுபவத்தை உருவாக்குகின்றன?”
இந்தக் கேள்விக்கான நேர்மையான பதில் பல குடும்பங்களில் மாற்றத்தின் தொடக்கமாக இருக்கலாம்.
கோபம் வருவது மனித இயல்பு.
ஆனால்,
“நான் இப்படித்தான்.”
“எனக்கு short temper.”
என்று அதை கடந்து செல்வதற்குப் பதிலாக,
“என் கோபத்தால் நான் நேசிக்கும் மனிதர்கள் தொடர்ந்து காயப்படக்கூடாது. இதை இன்னும் ஆரோக்கியமாக கையாள நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?”
என்று கேட்கத் தொடங்குங்கள்.
குடும்பத்தை பாதுகாப்பது சம்பாதிப்பதும் பொறுப்புகளை நிறைவேற்றுவதும் மட்டும் அல்ல.
நம்முடன் வாழும் மனிதர்கள்,
“நான் மதிக்கப்படுகிறேன்.”
“என் உணர்வுகள் கேட்கப்படுகின்றன.”
“இந்த வீட்டில் நான் பயமின்றி பேச முடியும்.”
என்று உணரக்கூடிய சூழலை உருவாக்குவதும் குடும்பத்தைப் பாதுகாப்பதன் ஒரு பகுதிதான்.
உங்களுக்கு அடிக்கடி கோபம் வருகிறது என்றால், இன்று ஒரு கேள்வியை மட்டும் உங்களிடம் கேட்டுப் பாருங்கள்:
“என் கோபத்தின் பின்னால் உண்மையில் என்ன இருக்கிறது?”
அந்தப் பதிலைப் புரிந்துகொள்ளத் தொடங்குவது உங்கள் கோபத்தை மட்டுமல்ல, உங்கள் உறவுகளையும் மாற்றுவதற்கான தொடக்கமாக இருக்கலாம்.
Dr. Mehar Nithyan, PhD (Psychology)
Director – Calmscious Psychotherapy Clinic- Contact 8838428286